டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஆக்கி: வாழ்வா, சாவா? ஆட்டத்தில் இந்தியா வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஆக்கியில் அயர்லாந்து அணியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
டோக்கியோ,
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் மகளிர் பிரிவு ஆக்கி போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடின.
போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதியை எட்ட கூடிய சூழலில் இந்தியா இருந்தது. இந்த போட்டியின் முதல் 3 கால் மணிநேர போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இந்நிலையில், வாழ்வா, சாவா? என்ற நிலையில் இருந்த இந்திய அணியில் 57வது நிமிடத்தில் வீராங்கனை நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்து அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இதனால், போட்டி நேர முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்திய மகளிர் ஆக்கி அணியின் காலிறுதி கனவு நனவாகியுள்ளது.
அயர்லாந்து அணியுடன் புள்ளிகள் கணக்கில் இந்தியா சமஅளவில் உள்ளது. இதனை தொடர்ந்து ஏ பிரிவில், தென்ஆப்பிரிக்க குடியரசு அணிக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. அயர்லாந்து அணி வலிமையான இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும்.