அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்கு வெளியே சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது!

அமெரிக்காவில் சக மாணவர்களை 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-01 01:05 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தன்னுடன் பயிலும் சக மாணவர்களை 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒரு பள்ளிக்கு வெளியே 2 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

வாஷிங்டனில் உள்ள ஐ டி இ ஏ பப்ளிக் சார்ட்டர் பள்ளி அருகே காலை 10 மணியளவில் 15 வயது சிறுவன் ஒருவன் தன்னுடன் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

நேற்று நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நேற்று தென்கிழக்கு வாஷிங்டனில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் மற்றொரு சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு மத்தியில், அமெரிக்காவில் தாக்குதல் ஆயுதங்களை தடை செய்வதில் உறுதியாக இருப்பதாக கடந்த செவ்வாயன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறிய நிலையில், இந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, டெட்ராய்ட் பகுதியில் கடந்த வார இறுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்