ஹபீஸ் சயீத்தை விடுவிக்க வேண்டுமாம்: முஷரப் சொல்கிறார்

பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜமாத் அத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வீஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-16 10:29 GMT
இஸ்லமாபாத்,
 
பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜமாத் அத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் ராணுவ ஆட்சியாளாரான பர்வீஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

ஜமாத் அத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் முக்கிய மூளையாக செயல்பட்டவர். அவர் தற்போது பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் உள்ளார்.

அமெரிக்க அரசின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெனால்டு டிரம்ப் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஜமாத் அத் தாவா அமைப்பு மீதும், அதன் தலைவர் ஹபீஸ் சையத் மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார். 

இதையடுத்து பீதி அடைந்த பாகிஸ்தான், ஜமாத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத்தை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது.  ஹபீஸ் லாகூரில் உள்ள வீட்டை விட்டு வெளியே வராதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான முஷரப், ஹபீஸ் சையத்தை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு முஷரப் அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தனது பேட்டியில் முஷரப் கூறியதாவது:- “ ஹபீஸ் சையதை கண்டிப்பாக விடுவிக்க வேண்டும். 

அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். நிலநடுக்கம், வெள்ளம், போன்ற இயற்கை பேரழிவின் போது நிவாரணப்பணிகளில் அவரது இயக்கம் ஈடுபட்டு வருகிறது தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரானவர்கள் ஹபீஸ் இயக்கத்தினர் என்பது எனது கருத்து. பாகிஸ்தானிலோ உலகின் எந்த ஒரு இடத்திலோ ஹபீஸ் சையதுவின் இயக்கம் பயங்கரவாத செயலில் ஈடுபடவில்லை” என்றார்.

மேலும் செய்திகள்