கடலில் மூழ்கிய ரஷ்ய உளவுக் கப்பல்

துருக்கி பாஸ்பரஸ் ஜலச்சந்தியில் ரஷ்ய உளவுக் கப்பல் ஒன்று சரக்கு கப்பலின் மீது மோதி சேதமடைந்ததில் கடலில் மூழ்கியது.

Update: 2017-04-29 09:49 GMT
ரஷ்யாவின் அறிவியல் ஆய்வு கப்பலான லீமன், 1989ல் நவீன கண்காணிப்பு கருவிகளை கொண்ட உளவுக் கப்பலாக மாற்றப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி துருக்கியின் பாஸ்பரஸ் ஜலசந்தியில் பயணம் செய்த போது வீட்டு விலங்குகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் மோதியது.

இதில் உளவு கப்பலின் அடிப்பாகம் அதிகம் சேதமடைந்தது, இதனால் கப்பலானது நீரில் மூழ்கியது. கப்பலுடன் நீரில் மூழ்கிய 78 வீரர்கள், ஆய்வாளர்கள் துருக்கி கப்பல் படையினர் மற்றும் சரக்கு கப்பல் ஊழியர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து துருக்கி கடலோர காவல் படையினர், துருக்கியின் உள்ளூர் நேரப்படி காலை 11.53 மணிக்கு உளவு கப்பலானது சரக்கு கப்பல் மீது மோதியது.
சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர் என அறிவித்துள்ளனர்.

தங்களின் கப்பல் விபத்துக்குள்ளானதை உறுதி செய்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் துருக்கிய கப்பலில் உள்ளவர்கள் விரைவில் ரஷிய கடற்படை கப்பலுக்கு மாற்றப்பட்டு நாடு திரும்புவர் என கூறியுள்ளது.

பாஸ்பரஸ் ஜலச்சந்தியில் இவ்வாறு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது சாதாரணம் எனினும் சரக்கு கப்பல் மூழ்கியது இதுவே முதல் முறையாகும்.அரிய தகவல்களை கொண்ட இந்த உளவு கப்பலை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், அதில் உள்ள ஆய்வுக் கருவிகளை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்