இலங்கையில் கனமழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இலங்கை திணறல்

இலங்கையில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டது. நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது.

Update: 2017-05-27 15:44 GMT
கொழும்பு,

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதி  மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி  91 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   200 க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இலங்கை அரசு திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை அரசு கோரியுள்ளது.   மீட்பு பணியில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் 48 மணி நேரத்தில் இலங்கைக்கு மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த  2003 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்படும் மிகமோசமான வெள்ளம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு இதே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 ஆயிரம் வீடுகள் அழிந்தன. 250 பேர் பலியாகினர்.

மேலும் செய்திகள்