நீல திமிங்கல விளையாட்டுக்கு மூளையாக செயல்பட்டு வந்த 17 வயது மாணவி கைது
நீல திமிங்கல விளையாட்டுக்கு மூளையாக செயல்பட்டு வந்த 17 வயது மாணவியை ரஷிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மாஸ்கோ,
நீல திமிங்கலம் விளையாட்டு என்பது, ஆன்-லைன் மூலம் விளையாடப்படும் விளையாட்டும். இந்த விளையாட்டில் சேர்பவர்களுக்கு 50 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலக்கு வழங்கப்படும் . அந்த இலக்கை அடைய வேண்டும். முதலில் சிறிய இலக்காகவும் நாட்கள் செல்ல செல்ல கடினமான இலக்கு தரப்படும். இறுதியாக 50-வது நாளில் விளையாட்டில் பங்கேற்போர் தற்கொலை செய்து கொண்டு, அந்த புகைப்படத்தை பகிர வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கும். இந்த விளையாட்டால் இந்தியாவில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நீல திமிங்கல விளையாட்டுக்கு மூளையாக செயல்பட்டு வந்த 17 வயது மாணவி மற்றும் வாலிபர் ஒருவரை ரஷிய அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் நாடு முழுவதும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட மாணவியிட விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விளையாட்டின் பிறப்பிடமான ரஷியாவில் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டை உருவாக்கியவரும், நிர்வாகியாக (அட்மின்) செயல்பட்டவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. நீல திமிங்கலம் விளையாட்டை முற்றிலும் இணையதளத்தில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் குறித்து ரஷிய போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.