பருவநிலை மாற்றம்: உலக அளவில் நடவடிக்கை எடுக்க ஐநாவில் வலியுறுத்தல்

பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் ஐநா பொதுச் சபையின் 72 ஆம் கூட்டத்தில் பேசும் போது உலக நாடுகள் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Update: 2017-09-24 12:49 GMT
ஐநா சபை

மைக்ரோனேஷியா, பாபுவா நியூ கினி மற்றும் மார்ஷல் தீவுகளின் அதிபர்களும், மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் ஐநா சபையில் பேசுகையில் பருவ நிலை மாற்றத்தால் தங்களது நாடுகள் கடல் கோள் கொள்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் இதை எதிர்கொள்ள உலக நாடுகள் பொருத்தமான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஏழை நாடுகள் மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களை பயன்படுத்த தேவையான நிதியுதவிகளை உலக நாடுகள் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

உலகளவில் மீன்களின் எண்ணிக்கை குறைந்து வேலையும், உணவும் கிடைக்காத சூழலில் தங்களது பாரம்பரிய வீடுகளை கைவிட்டு வெளியேறி வருகின்றனர் என்று குறிப்பிட்டார் பாபுவா நியூ கினியின் அதிபர். 

மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அசிம் பேசுகையில் ”பருவ நிலை மாற்றம் கொடுக்கும் அச்சத்தை விட பெரியதொரு அச்சம் உலகளவில் இல்லை” என்றார். கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவை தாக்கிய புயல்களின் தீவிரவத்தை சுட்டிக்காட்டிய அவர் நாம் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் பருவநிலை மாற்றம் என்பது உலக யதார்த்தமாக மாறியுள்ளது” என்றார் அசிம்.

மேலும் செய்திகள்