ஜெர்மன் பொது தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் வெற்றி: 4-வது முறையாக பிரதமர் ஆகிறார்

ஜெர்மன் பொது தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் வெற்றி பெற்றார். இதன் மூலம் அந்நாட்டில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஆகிறார்

Update: 2017-09-25 03:14 GMT
பெர்லின்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (வயது 63) தலைமையிலான ஆட்சி 2005–ம் ஆண்டு நவம்பர் 22–ந் தேதி முதல் நடந்து வருகிறது. 2005, 2009, 2013 என தொடர்ச்சியாக 3 முறை அவரது கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது.இதன்மூலம் ஜெர்மனியில் நிலையான ஆட்சியை நடத்துகிறார் என்ற நம்பிக்கையை சர்வதேச அரங்கில் அவர் ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில், ஜெர்மனியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 6 கோடியே 15 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். 6 கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த வெற்றி குறித்து ஏஞ்சலா மெர்கல் கூறுகையில், இதைவிட அதிக சதவீதம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனாலும், தேர்தலில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஜெர்மன் பிரதமராக 4-வது முறையாக ஏஞ்சலா மெர்கல் பதவியேற்கிறார். 

மேலும் செய்திகள்