வடகொரியா பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு சீனா வலியுறுத்தல்
வடகொரியா பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா வலியுறுத்தியுள்ளது.
பெய்ஜிங்,
வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகள் சர்வதேச நாடுகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்க, அமெரிக்கா-வடகொரியா இடையேயான கருத்து மோதல் முற்றி, போர் ஏற்படும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னிற்கும் இடையேயான கருத்து மற்றும் கிண்டல் மோதல்களும் உச்சத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை அமெரிக்கா மீண்டும் சேர்த்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா மீது மேலும் சில புதிய தடைகளை விதிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். அவரது இந்த முடிவை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரவேற்றுள்ளார்.
இந்த நிலையில், வடகொரியாவுக்கு எதிரான அறிவிப்பையடுத்து, பேச்சுவார்த்தைக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத நெருக்கடிக்கு கூடுதல் முயற்சி மேற்கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.