ஐ.நா. அமைப்பு மற்றும் அமெரிக்காவால் தீவிரவாத தலைவர் என அறிவிக்கப்பட்டவர் சயீத்: டிரம்ப் நிர்வாகம்

வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்காவால் தீவிரவாத தலைவர் என அறிவிக்கப்பட்டவர் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

Update: 2017-11-23 08:12 GMT
வாஷிங்டன்,

மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த தாக்குதலில் பின்னணியாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். ஜமாத் உத் தவா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த ஜனவரியில் இருந்து இவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் அறிவித்தது. இதற்கு தனது அதிருப்தியை டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க கருவூல துறையால் உலக தீவிரவாதிகள் வரிசையில் சயீத் சேர்க்கப்பட்டார்.  2008ல் நவம்பரில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து டிசம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் சயீத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார்.

தீவிரவாத தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பேரை கொன்ற லஷ்கர் இ தைபா இயக்கம் ஆனது தீவிரவாத அமைப்பு என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளது.

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக ஹபீசை பிடித்து தருபவர்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்