இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ கொலை வழக்கு: தந்தை மீது கொலை குற்றச்சாட்டு பதிவு

இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ கொலை வழக்கில் வளர்ப்பு தந்தை மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews | #latesttamilnews

Update: 2018-01-13 12:45 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் கேரள மாநிலத்தை சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.  இவரின்  2-வது மகளான ஷெரின்மேத்யூஸ் (வயது 3)  அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டவர் ஆவார். கடந்த மாதம் 6-ம் தேதி சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லி அந்த சிறுமியை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் விட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி காணாமல் போனாள்.

இதுகுறித்து அவர், ரிச்சர்ட்சன் நகர் போலீசில் புகார் செய்தார். சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த சிறுமியை போலீசார் தேடினர். மேத்யூசுவின் வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து 27-ம் தேதி ஒரு சிறுமியின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். இதுகுறித்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனை அந்த சடலம் காணாமல் போன இந்திய சிறுமியின் உடல் என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து வெஸ்லி மேத்யூசை, ரிச்சர்ட்சன் போலீசார் கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து வெஸ்லியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷெரினை அடித்ததை அவர் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, வெஸ்லியும் அவரது மனைவி சினியும் கைது செய்யப்பட்டனர். ஷெரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்ததாக ஷெரினின் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இந்த நிலையில் ஷெரின் மரணத்துக்கு மூலக்காரணமாக இருந்த வெஸ்லி மேத்யூ மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டல்லாஸ் மாவட்ட வழக்கறிஞர் கூறும்போது, இதனை விவரமாக கூற முடியாது. ஆனால் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் குற்றச்சாட்டப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் வெஸ்லியின் மனைவி சினிக்கு எந்த தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்