முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்; பாகிஸ்தான் அரசுக்கு ஹபீஸ் சயீத் சவால்
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று பாகிஸ்தான் அரசுக்கு பயங்கரவாதி ஹபீஸ் சயீத் சவால் விடுத்துள்ளார். #HafizSaeed
லாகூர்,
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியும் பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத், முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என்று பாகிஸ்தான் அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்று (திங்கள் கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஹபீஸ் சயீத் பேசியதாவது:- “ நீங்கள் (அரசு) அடக்க முயன்றால் இப்போது இருப்பதை விட பல மடங்கு பலத்துடன் நாங்கள் மீண்டும் எழுவோம். என்னை கைது செய்ய வேண்டும் என்றால் பாகிஸ்தான் அரசு தாராளமாக கைது செய்யலாம். ஆனால், காஷ்மீர் மக்களுக்கான எனது போராட்டம் ஒரு போதும் ஓயாது. முன்பு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரத்தில் உரிய முறையில் செயல்படவில்லை.
காஷ்மீர் மக்களின் விடுதலைக்கு உதவுவதாக நவாஸ் ஷெரீப் அளித்த வாக்குறுதி அடிப்படையில்தான் அவருக்காக தேர்தல் பணியாற்றினோம். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நெருக்கடியால் எனது நிகழ்ச்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.