ஆஸ்திரேலியாவில் மலை உச்சியில் இருந்து கடலுக்குள் விழுந்த இந்திய மாணவர் பலி: ‘செல்பி’ எடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்

ஆஸ்திரேலியாவில் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது மலை உச்சியில் இருந்து கடலுக்குள் விழுந்த இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-05-21 23:30 GMT
மெல்போர்ன், 

மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரான அல்பானிக்கு அருகே ‘தி கேப்’ என்னும் 40 மீட்டர் உயரம் கொண்ட சிறிய மலை உள்ளது. உலகின் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலமாகவும் இது திகழ்கிறது. இதன் மேற்பகுதி மிகவும் செங்குத்தானது.

இங்கு கடந்த வியாழக்கிழமை தனது 4 நண்பர்களுடன் அங்கித்(வயது 20) என்ற இந்திய மாணவர் ஒருவர் சுற்றுலா சென்றார். அப்போது மலையின் பாறைகளை ஒவ்வொன்றாக உற்சாகத்துடன் தாண்டி குதித்துக்கொண்டே அவர் அதை ‘செல்பி’யாக படம் பிடிக்கவும் செய்தார். செங்குத்தான மலை உச்சியில் அவர் இப்படி தாவி ஓடியபோது எதிர்பாராத விதமாக இன்னொரு பாறையில் கால்களை வைக்க முடியாமல் தவறி அங்கிருந்த கடலுக்குள் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் கடலில் மூழ்கி உயிர் இழந்தார். அவருடைய உடல் ஒரு மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்டது.

இறந்த மாணவரின் பெற்றோரை தொடர்பு கொள்ள ஆஸ்திரேலிய போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவனின் நண்பர்கள் கூறுகையில், “அவன் மிகுந்த கவனமாகத்தான் செல்பி எடுத்தான். ஆனால் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரை இழந்துவிட்டான்” என்று சோகத்துடன் கூறினர்.

இறந்த மாணவர் அங்கித், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தங்கியிருந்து படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்