11 லட்சம் ‘பெயர்களுடன்’ சூரியனை நோக்கிச் செல்லும் விண்கலம்

சூரியனை நோக்கிச் செல்லவிருக்கும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர் களைத் தாங்கியபடி பயணிக்கும் என்று ‘நாசா’ விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

Update: 2018-06-09 11:05 GMT
சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான சூரியன், வாயுக்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். இதன் விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர்கள்.

சந்திரன், செவ்வாய்க் கிரகங்களுக்கும் மற்றும் பல விண்வெளி ஆய்வுகளுக்கும் இதுவரை விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் தற்போதுதான், சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் முயற்சியில் நாசா இறங்கியிருக்கிறது.

அதன்படி, சூரியனின் சுற்றுப்புற வெப்ப நிலைக்கு ஏற்றவாறு, அதைத் தாங்கக் கூடிய வகையில் ஒரு விண்கலம் உருவாகி வருகிறது.

‘பார்க்கர் சோலார்’ எனப்படும் இந்த விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களைத் தாங்கி விண்ணுக்குச் செல்லவிருப்பதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன் எந்த விண்கலமும் சென்றதைவிட அதிக நெருக்கமாக சூரியனிடம் சென்று இவ்விண்கலம் ஆய்வு நடத்தும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விஞ்ஞானி நிக்கோலா பாக்ஸ் கூறும்போது, ‘‘பார்க்கர் சோலார் விண்கலத்தின் சூரிய ஆய்வின் மூலம், சூரியனைப் பற்றிய நமது புரிதல் அதிகமாகும். சூரியனை நாம் நெருங்கி அறிய முடியும். இந்த விண்கலம், பல லட்சம் மக்களின் பெயர்களைச் சுமந்துசெல்கிறது’’ என்றார்.

இந்த விண்கலத்தின் மூலம் தமது பெயரை அனுப்ப விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் இரண்டு மாத காலத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பெயர்கள் அடங்கிய மெமரி கார்டு கொண்ட விண்கலம், வருகிற ஜூலை 31-ம் தேதி விண்ணில் சூரியனை நோக்கி அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்