அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் பயங்கரவாதி பலி
அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் தெரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா பாஸல் உல்லா கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #USDroneAttack
குரோன்,
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் குரோன் பகுதியில் முல்லா பாஸல் உல்லா என்னும் பயங்கரவாதி தலைமையில் தெரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் பல மோசமான தாக்குதல்களை இந்த இயக்கம் நடத்தியுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முல்லா பாஸல் உல்லா தலைக்கு அமெரிக்க அரசாங்கம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிர்ணயம் செய்தது.
இந்நிலையில் நேற்று தெரிக் இ தலிபான் இயக்கத்தின் மீது அமெரிக்க அரசாங்கம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. மேலும் இந்த தாக்குதலில் முல்லா பாஸல் உல்லா கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்த முல்லா பாஸல் உல்லா தலைமையின் கீழ் பாகிஸ்தானின் பெஷாவரில் இருக்கும் ராணுவ பள்ளி ஒன்றில் கடந்த 2014-ம் ஆண்டு தெரிக் இ தலிபான் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 151 மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.