பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது பள்ளிக்கூடங்கள் எரிப்புக்கு காரணமானவர் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள கில்கிட் பாலிஸ்தான் பகுதியில் டயாமர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி இரவு, 12 பள்ளிக்கூடங்களை பயங்கரவாதிகள் தீயிட்டு எரித்தனர்.

Update: 2018-08-05 21:27 GMT
கராச்சி, 

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள கில்கிட் பாலிஸ்தான் பகுதியில் டயாமர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி இரவு, 12 பள்ளிக்கூடங்களை பயங்கரவாதிகள் தீயிட்டு எரித்தனர். உயிர்ப்பலிகள் எதுவும் நேரிடவில்லை என்றாலும், பள்ளிக்கூடங்கள் எரிக்கப்பட்டது அங்கு உள்ள மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கண்டனப் போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அந்த பள்ளிக்கூடங்கள் எரிப்புக்கு காரணமானவர்கள் டயாமர் பகுதியில் பல்வேறு இடங்களில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது டாங்கர் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், போலீஸ் படையினருக்கும் கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் ஷபீக் என்பவர் குண்டு பாய்ந்து பலி ஆனார். இவர் பள்ளிக்கூடங்கள் எரிப்பில் முக்கிய தொடர்பு உடையவர் என தகவல்கள் கூறுகின்றன. ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார். 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி டயாமர் போலீஸ் செய்தி தொடர்பாளர் பைசுல்லா பராக கூறுகையில், “பள்ளிக்கூட எரிப்பில் தொடர்பு உடையவர்களை 12 போலீசாரை கொண்ட படையினர் தேடினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. தேடுதல் வேட்டையில் இதுவரை 30 பேர் சிக்கி உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின்போது ஏராளமான ஆயுதங்கள் சிக்கியதாக போலீஸ் ஐ.ஜி. கோஹார் நபீஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்