ஈக்வடார் நாட்டில் பேருந்து விபத்தில் 24 பேர் பலி

ஈக்வடார் நாட்டில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். #EcuadorAccident

Update: 2018-08-15 03:39 GMT
குவைட்டோ,

ஈக்வடார் தலைநகர் குவைட்டோ தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து, சிறிய வாகனம் மீது மோதியதில் 24 பேர் பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். 

அதிகாலை 3 மணியளவில் கொலம்பியா நாட்டு பதிவு எண்ணைக் கொண்ட அந்த பேருந்து வளைவு பாதையில் செல்லும் போது மற்றொரு வாகனம் மீது மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர் என ஈக்வடார் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈக்வடார் நாட்டின் தலைமை போக்குவரத்து அதிகாரி வில்சன் பவோன் கூறுகையில், விபத்தில் பலியானவர்களில் அதிகம் பேர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால், வெனிசூலா நாட்டைச் சேர்ந்தவர்களும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் சிறிய வாகனத்தில் வந்த இரு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனக் கூறினார்.

இந்நிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஈக்வாடார் நாட்டில் கடந்த 3 நாட்களில் நடைபெறும் 2-வது பெரிய விபத்தாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை குவைட்டோ நகரின் தேசிய நெடுஞ்சாலையில் ஈக்வாடார் பார்சிலோனா கிளப் கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் சென்ற வாகனம் அதிகாலை விபத்துக்குள்ளாகி 12 பேர் பலியாகினர் மற்றும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் செய்திகள்