ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு படையினர் 10 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் வடக்கு பாக்லன் மாகாணத்தில் அமைந்த ராணுவ மற்றும் காவல் துறை கூட்டு படை தளத்தின் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 ராணுவ அதிகாரிகள் மற்றும் 2 காவல் துறை அதிகாரிகள் பலியாகினர். பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதேபோன்று ஆப்கானிஸ்தானில் வடமேற்கு பாத்கிஸ் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்துல் ஹக்கீம் என்ற காவல் துறை உயரதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு ஊடுருவல் அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால், தலீபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்க கூடும் என உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.