பாகிஸ்தானில் பள்ளி கூடத்தில் கொடியேற்றிய 3 மாணவர்கள், ஆசிரியர் மின்சாரம் பாய்ந்து பலி

பாகிஸ்தானில் பள்ளி கூடம் ஒன்றில் இறை வணக்கத்தில் கொடியேற்றும்பொழுது மின்சாரம் பாய்ந்து 3 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் உயிரிழந்தனர்.

Update: 2018-09-18 09:47 GMT

பெஷாவர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெஷாவர் நகரில் பள்ளி கூடம் ஒன்று அமைந்துள்ளது.  இங்கு இன்று காலை இறை வணக்கத்திற்காக மாணவர்கள் கொடியேற்ற சென்றுள்ளனர்.  இரும்பினால் ஆன கொடி கம்பம் மீது மின்சார ஒயர் ஒன்று உரசியபடி இருந்துள்ளது.  இந்த நிலையில் கொடியேற்ற முயற்சித்த மாணவர்களில் 3 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.  அவர்களை காப்பாற்ற சென்ற ஆசிரியர் ஒருவரும் பலியானார்.

ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் ஒருவர் குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் காயமடைந்தனர்.  அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் 4, 5 மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.  எனினும், மற்ற மாணவர்களின் பாதுகாப்பினை முன்னிட்டு பள்ளி கூடம் உடனடியாக மூடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்