அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்றார்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்று கொண்டார்.

Update: 2018-10-07 02:05 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பிரெட் கவனாக்கை அதிபர் டொனால் டிரம்ப் நியமித்த நிலையில் அவர் மீது பாலியல் துன்புறுத்தலுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் நேற்று செனட் சபையில் நீதிபதி நியமன ஒப்புதலுக்கான வாக்கெடுப்பு நடக்க இருந்தது.  அதற்கு சில மணிநேரத்திற்கு முன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று கூடி வாஷிங்டன் நகரில் பேரணியாக சென்றனர்.  அவர்கள் கவனாக்கிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்தது.  இதில் 50க்கு 48 என்ற அடிப்படையில் கவனாக்கிற்கு ஆதரவாக ஒப்புதல் கிடைத்தது.  இதனால் டிரம்பின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை உறுதியளித்து உள்ளது.

வருகிற நவம்பர் 6ந்தேதி இடைக்கால தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கவனாக் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உறுதி செய்யப்பட்டு உள்ளது டிரம்பிற்கும் மற்றும் அவரது ஆளும் குடியரசு கட்சிக்கும் கிடைத்த அரசியல் வெற்றியாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து 53 வயது நிறைந்த கவனாக் நேற்றிரவு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவியேற்று கொண்டார்.

மேலும் செய்திகள்