இலங்கை நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடுகிறது - அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ந் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

Update: 2018-11-04 18:30 GMT
கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் நாடாளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கிவைத்தார். இதற்கு ரனில் விக்ரமசிங்கே மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐ.நா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்தி வந்த நிலையில், நாடாளுமன்றம் 7-ந் தேதி கூடும் என தகவல் வெளியானது. எனினும் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகாததால் நாடாளுமன்றம் கூடுவதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவரது செயலாளர் உதய சேனவிரத்னே மூலம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இலங்கை நாடாளுமன்றம் கூடுவதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது.

மேலும் செய்திகள்