இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

Update: 2018-11-13 13:03 GMT
கொழும்பு,

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26–ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார்.

ஆனால் ரனில் விக்ரம சிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.  இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்ந்தது. ரனில் விக்ரம சிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார்.

இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இலங்கையில், நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு எதிராகவும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இலங்கையில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.

இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவி வந்த சூழலில் பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து அதற்கு கையெழுத்திட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.  இந்த விசாரணையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

தொடர்ந்து, இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கும் அவர்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்.

மேலும் செய்திகள்