அபுதாபியில் இந்தி பாடகர் மிகா சிங் கைது - மாடல் அழகிக்கு ஆபாச படம் அனுப்பியதாக புகார்

அபுதாபியில் இந்தி பாடகர் மிகா சிங், மாடல் அழகிக்கு ஆபாச படம் அனுப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-07 23:15 GMT
அபுதாபி,

அபுதாபியில் நடைபெற்ற பாலிவுட் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து இந்தி பாடகர் மிகா சிங் சென்றார். இவர் நிகழ்ச்சி முடிந்த பிறகு நடந்த நள்ளிரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த 17 வயது மாடல் அழகியின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த மாடல் அழகி அபுதாபி மொரகாபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், இந்தி பாடகர் மிகா சிங்கை கைது செய்தனர். பாடகர் மிகா சிங், ஏற்கனவே இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு பொது மேடையில் முத்தம் கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகா சிங் கைது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, இதுவரை அவரை நாங்களோ அல்லது அவரோ தொடர்பு கொள்ளவில்லை. அவர் அபுதாபியில் உள்ளார் என்ற தகவல் மட்டும் தெரியும் என்றனர்.


மேலும் செய்திகள்