பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்டிராஸ்பர்க் நகர் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கொன்ற ஷெரீப் தங்கள் இயக்கத்தின் போராளி என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தெரிவித்தது

Update: 2018-12-14 23:00 GMT
ஸ்டிராஸ்பர்க்,

பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்பர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டு, பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் குண்டு காயத்துடன் தப்பி ஓடிவிட்டார்.

போலீசாரின் விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் ஸ்டிராஸ்பர்க்கை சேர்ந்த ஷெரீப் செக்காட் (வயது 29) என்பதும், இவர் மீது 4 ஐரோப்பிய நாடுகளில் 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, ஷெரீப்பை தேடி பிடிப்பதற்கான வேட்டையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்களின் உதவியோடு இரவு, பகலாக தேடுதல் வேட்டை நீடித்தது.

இந்த நிலையில், ஸ்டிராஸ்பர்க்கின் புறநகர் பகுதியான நியுடோர்ப் என்கிற இடத்தில் ஷெரீப் பதுங்கி இருப்பது நேற்று முன்தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதிக்கு ஏராளமான வாகனங்களில் போலீசார் விரைந்தனர். அவர்கள் ஷெரீப்பை சுற்றிவளைத்து, கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் அவரோ போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதையடுத்து, போலீசார் பதில் தாக்குதல் நடத்தி அவரை சுட்டுக்கொன்றனர். அப்போது அந்த பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் “சபாஷ், சபாஷ்” என முழக்கமிட்டு போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே ஸ்டிராஸ்பர்க் நகர் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கொன்ற ஷெரீப் தங்கள் இயக்கத்தின் போராளி என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தெரிவித்தது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் இருந்துகொண்டு சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து பிரான்ஸ் ராணுவம் நடத்திவரும் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்