பாரீசில் வாயுகசிந்து வெடித்து சிதறியது; 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் பலி
பிரான்சில் வாயுகசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் 2 தீயணைப்பு வீரர்கள் மற்றும் சுற்றுலா பெண் பயணி என 3 பேர் பலியாகினர்.
பாரீஸ்,
மத்திய பாரீசில் உள்ள பிரபல பேக்கரியில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ மளமளவென பரவியது. இதில் அருகில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்து விரைந்த 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அவர்கள் அந்த பகுதி குடியிருப்புவாசிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். கார்கள் புரண்டு திரும்பின. கட்டிடங்களின் கண்ணாடிகள் வெடித்து விழுந்தன. புகை எங்கும் பரவி இருந்தது.
இந்த சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தனது கணவருடன் விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்த பெண் ஒருவரும் பலியானார். 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.