இந்திய மாணவி உள்பட 22 பேரை பலி கொண்ட வங்காளதேச ஓட்டல் தாக்குதலுக்கு ஆயுதங்களை வழங்கியவர் கைது

இந்திய மாணவி உள்பட 22 பேரை பலி கொண்ட, வங்காளதேச ஓட்டல் தாக்குதலுக்கு ஆயுதங்களை வழங்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-01-21 22:15 GMT
டாக்கா,

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற ஓட்டலுக்குள் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 5 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்தியாவை சேர்ந்த தரிஷி ஜெயின் (வயது 19) என்கிற மாணவி உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 17 பேரும், பாதுகாப்புபடை வீரர்கள் 2 பேர் உள்பட வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேரும் பலியாகினர்.

அதே சமயம் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலில், உயிர் இழந்த 5 பயங்கரவாதிகள் தவிர மேலும் 17 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் 9 பேர் ராணுவம் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் உயிர் இழந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

எனினும், இந்த தாக்குதலுக்கு நிதி உதவி அளித்ததோடு, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் வழங்கிய மாமூனர் ராசீத் (30) என்பவர் உள்பட 2 பேர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் டாக்காவின் புறநகர் பகுதியில் மாமூனர் ராசீத் பஸ்சில் சென்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மாமூனர் ராசீத்தை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்