காஷ்மீர் தாக்குதலுக்கு பிந்தைய நிலை: ஆப்பிரிக்க நாட்டு தூதர்களுக்கு பாகிஸ்தான் விளக்கம்

காஷ்மீர் தாக்குதலுக்கு பிந்தைய நிலை குறித்து, ஆப்பிரிக்க நாட்டு தூதர்களுக்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்தது.

Update: 2019-02-17 22:15 GMT
இஸ்லாமாபாத்,

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கடந்த 15-ந் தேதி சுமார் 25 நாடுகளின் தூதர்களை அழைத்து மத்திய அரசு விளக்கியது. இதில் சீனா, ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் தூதர்களும் அடங்குவர். இந்த கூட்டத்தில் பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக பாகிஸ்தான் பயன்படுத்துவது குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.

இதற்கு போட்டியாக பாகிஸ்தானும் நேற்று பல்வேறு வெளிநாட்டு தூதர்களை அழைத்து புலவாமா தாக்குதலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து விளக்கியது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் புலவாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டெமினா ஜன்ஜுவா விளக்கியதாகவும், அப்போது புலவாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா கூறி வரும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அவர் கூறியதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்