இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி - ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன

இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.

Update: 2019-04-22 22:45 GMT
பாரீஸ்,

இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் நேற்று முன்தினம் இரவு அணைக்கப்பட்டன.

எப்போதும் நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஈபிள் கோபுரம் இலங்கை மக்களின் துயரத்தில் பங்கு கொண்டது. இதனால் ஈபிள் கோபுரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இதற்குமுன் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்காகவும், 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் நகரின் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களுக்காகவும் ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குள் அணைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்