ஏமன் நாட்டில் மசூதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டில் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-06-08 23:15 GMT
ஏடன்,

ஏமன் நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 30 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

அங்கு அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாலியா மாகாணத்தில் அசாரிக் மாவட்டத்தில், ஒரு மசூதியில் நேற்று முன்தினம் தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் ஒரு வாகனத்தில் வந்து இறங்கினர். அவர்கள் இறங்கிய வேகத்தில், மசூதியில் நுழைந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் அங்கிருந்தவர்கள் பதறியடித்தவாறு நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.

இதற்கிடையே தாக்குதல்களை நடத்தியவர்களும், அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர். அவர்கள் தங்களுடன் 3 பேரை கடத்திச்சென்றனர்.

இந்த தாக்குதலின்போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த 5 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என உடனடியாக தெரிய வரவில்லை. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்