இலங்கையில் தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன் -ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
பிஷ்கேக்,
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று பிஷ்கேக் நகருக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில், நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. இதன் செயல்பாட்டில் இந்தியா தனது பங்களிப்பை உறுதி செய்துள்ளது.
இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன். தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இணைந்து செயல்பட மனிதாபிமான சக்திகள் முன்வர வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி, ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். இந்த போரில், அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.