சிரியாவில் அரசுக்கும், போராளிகளுக்கும் இடையேயான மோதலில் 130 பேர் பலி

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதலில் 130 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-06-20 11:30 GMT
பெய்ரூட்,

சிரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், போராளிகள் படைகளுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டுப்போர் தொடங்கி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.  இந்த போரால் குழந்தைகள் உள்பட 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.  லட்சக்கணக்கான பொதுமக்கள் வீடுகளையும், சொந்த இடங்களையும் விட்டு இடம் பெயர்ந்து உள்ளனர்.

அரசுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகளும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ஒழிக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படையினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியா நாட்டின் இத்லிப் பகுதியில் 30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.  சர்வதேச அளவிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, கடந்த பல மாதங்களாக இந்த பகுதி பாதுகாக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், சிரிய அரசு படையினரும் மற்றும் ரஷ்ய கூட்டு படையினரும் கடந்த ஏப்ரலில் இருந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து அரசு மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் குறிப்பிடும்படியாக தல் மெலி என்ற கிராம பகுதியை சுற்றி கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன.  இதனால் அரசு தரப்பிலும், அரசுக்கு எதிரான போராளிகள் தரப்பிலும் பலர் பலியாகி வருகின்றனர்.  இன்று 14 போராளிகளும், 21 அரசு படையினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

கடந்த 48 மணிநேரத்தில் போராளிகள் தரப்பில் 89 பேரும், அரசு தரப்பில் 41 பேரும் என 130 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.  அரசின் தாக்குதலில் பொதுமக்களில் 17 பேர் நேற்று பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்