இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கையில் அவசர நிலையை திடீரென மேலும் ஒரு மாதம் நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-06-22 07:19 GMT
கொழும்பு,

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 சொகுசு ஓட்டல் களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 22-ந் தேதி இலங்கை அதிபர் சிறிசேனா நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். இதன்மூலம் பொது பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு சந்தேகத்துக்குரிய யாரையும் கைது செய்ய அதிகாரம் வழங்குகிறது.

குண்டு வெடிப்புக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமான 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 பெண்களும் அடக்கம். அவசர நிலை இருப்பதால் பல்வேறு நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா செல்ல தங்கள் குடிமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

சிறிசேனா கடந்த மே மாத இறுதியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தூதர்களுடன் பேசினார். இலங்கையில் பாதுகாப்பு நிலைமை 99 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. குண்டுவெடிப்புக்கு காரணமான அனைவரையும் பாதுகாப்பு படை ஒன்று கைது செய்துவிட்டது அல்லது கொன்று விட்டது. எனவே அவசர நிலை சட்டங் களை ஜூன் 22-ந் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர அனுமதி வழங்கியுள்ளேன் என்று அவர்களிடம் கூறியிருந்தார்.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை உத்தரவின் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே தொடர்ந்து அவசர நிலை நீட்டிக்கப்படாது என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் நேற்று திடீரென இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிபர் சிறிசேனா, “பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

சிறிசேனா திடீரென தனது முடிவை ஏன் மாற்றிக்கொண்டார் என்பது குறித்து அரசு தரப்பில் எந்த காரணமும் கூறப்படவில்லை.

மேலும் செய்திகள்