அமெரிக்காவில் ‘எச்1–பி’ விசா முறைகேடு; 4 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் ‘எச்1–பி’ விசா முறைகேட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-07-03 22:45 GMT
வாஷிங்டன், 

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த விஜய் மனோ (வயது 39), வெங்கட்ரமணா மனனம் (47), பெர்னாண்டோ சில்வா (53) மற்றும் கலிபோர்னியாவை சேர்ந்த சதீஸ் வெமுரி (52) ஆகிய 4 பேரும் இணைந்து 2 ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள் 4 பேரும் ‘எச்1–பி’ விசா திட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது, ரகசிய விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, இவர்கள் தங்களின் நிறுவனங்களுக்கு ‘எச்1–பி’ விசா மூலம் ஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்தி கொண்டு, சிறிது நாட்களில் வேறு நிறுவனத்துக்கு மாற்றிவிடுவார்கள்.

இந்த மோசடி தொடர்பாக விஜய் மனோ உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே சமயம் இது தொடர்பாக வழக்கு விசாரணை நியூஜெர்சி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதில் அவர்கள் 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2½ லட்சம் டாலர்கள் (ரூ.1 கோடியே 72 லட்சம்) அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் செய்திகள்