டிரம்பின் இனவெறி கருத்தால் மீண்டும் சர்ச்சை

டிரம்பின் இனவெறி கருத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

Update: 2019-07-28 23:30 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்மையில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 4 பேரை பூர்வீக நாட்டுக்கு திரும்பி செல்லுமாறு கூறி சர்ச்சையில் சிக்கினார். இது பல்வேறு தரப்பிலும் கண்டனத்துக்கு வழிவகுத்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் நிறவெறியை தூண்டும் வகையில் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர் நகரம் குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில், “பால்டிமோர், எலிகளால் கொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சிதறிக் கிடக்கும் அருவருப்பான நகரம். மனிதர்கள் யாரும் அங்கு வசிப்பதற்கு விரும்ப மாட்டார்கள். அமெரிக்காவிலேயே அது மோசமான நகரம். மெக்சிகோ எல்லையில் இருக்கும் அகதிகளைக் காட்டிலும் மோசமானவர்கள் வசிக்கும் நகரம்” என்று குறிப்பிட்டார்.

பால்டிமோர் நகரை சேர்ந்தவரும், கருப்பினத்தவருமான ஜனநாயக கட்சி எம்.பி. எலிஜா கம்மிங்ஸ் என்பவரை குறிவைத்தே டிரம்ப் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. பால்டிமோர் நகர் மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் கருப்பினத்தவர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில், டிரம்பின் இந்த கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்