சர்ச்சையான கருத்து: மத போதகர் ஜாகீர் நாயக்கிடம் விசாரணை நடத்த மலேசிய அரசு முடிவு

சர்ச்சையான கருத்துக்களை கூறியதாக மத போதகர் ஜாகீர் நாயக்கிடம் விசாரணை நடத்த மலேசிய அரசு முடிவு செய்து உள்ளது.

Update: 2019-08-16 06:14 GMT
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்காக  மத போதகர் ஜாகீர் நாயக் மலேசியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இதை ஏற்க மறுத்த இண்டர்போல், எந்த நீதிமன்றத்திலும் ஜாகீர் நாயக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று 2017-ல் நிராகரித்து விட்டது.

ஜாகீர் நாயக் வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டில் விசாரிக்க வேண்டியது உள்ளது என இந்திய அரசு, 2018-ல் அவரை நாடு கடத்த மலேசிய அரசுக்கு முறையான கோரிக்கையை முன்வைத்தது. இருப்பினும் சாதகமான பதில் வரவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருகிறார் ஜாகீர் நாயக்.

மலேசிய அமைச்சரவை  கூடி  இந்திய இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக்கிற்கு நிரந்தர  குடியுரிமை வழங்குவது குறித்து  விவாதித்தது. இந்த கூட்டத்தில் மூன்று அமைச்சர்கள்  பல இன தேசத்தில் இனரீதியான உணர்ச்சிகரமான கருத்துக்களை கூறியதற்காக அவரை வெளியேற்ற வேண்டும் என கூறி உள்ளனர்.

சமீபத்தில் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரை விட தென்கிழக்கு ஆசிய நாட்டில் இந்துக்களுக்கு "100 மடங்கு அதிக உரிமைகள்" இருப்பதாக அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியது.

இந்த சர்ச்சையான கருத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என  கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து  இந்திய இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக்கை பல இன தேசத்தில் இனரீதியாக உணர்ச்சிகரமான கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து மலேசிய அதிகாரிகள்  விசாரணைக்கு அழைப்பார்கள் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

ஜாகீர் நாயக் "இனரீதியான கருத்துக்களை" வெளியிட்டதற்காகவும், பொதுமக்களின் உணர்ச்சிகளை பாதிக்கும் வகையில்  தவறான செய்திகளை பரப்பியதற்காகவும் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று  மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

"குடிமக்கள் அல்லாதவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன், எனது அமைச்சகத்தின்  கீழ் பொது நல்லிணக்கத்தையும் அமைதியையும் அச்சுறுத்த முயற்சிக்கும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன்" என்று முஹைதீன் யாசின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்