கனடா நாடாளுமன்றம் கலைப்பு; பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நடவடிக்கை

கனடா நாடாளுமன்றத்தினை கலைத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2019-09-11 15:30 GMT
டொரண்டோ,

கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ (வயது 47) இருந்து வருகிறார்.  அவரது அரசின் மீது கடந்த பிப்ரவரியில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.  லாவலின் என்ற பொறியியல் நிறுவனத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டு பற்றிய வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்படுத்தி கொள்ள, அந்நாட்டின் அட்டர்னி ஜெனரலான ஜோடி வில்சனுக்கு, ட்ருடோ மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இது அந்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியது.  அரசில் உயர்மட்டத்தில் இருந்த பலர் ராஜினாமா செய்ய நேர்ந்தது.  இந்த நிலையில், ட்ருடோ கனடா நாடாளுமன்றத்தினை இன்று கலைத்து உள்ளார்.  இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க உள்ளது.  2வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் அவர் இருக்கிறார்.

கனடா நாட்டில் சிறுபான்மை அரசுகள் 18 மாதங்களுக்கு மேல் ஆட்சியில் நீடிப்பது என்பது மிக அரிது.  இந்த நிலையில், வருகிற அக்டோபர் 21ந்தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக வேட்பாளர்கள் தயாராகவுள்ளனர்.

கனடாவில் 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து இருந்தது.  சமீபத்திய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவை விட சற்று அதிகம் இருந்தது.  எனினும் ஊழல் குற்றச்சாட்டுகளால் ட்ருடோவின் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.  இந்நிலையில், கனடா நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்