இங்கிலாந்து ; டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள் எனத் தகவல்

லண்டன் அருகே டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Update: 2019-10-24 14:04 GMT
லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில் இருக்கும் தொழிற்பூங்காவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணிக்கு பல்கேரியா நாட்டில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த கண்டெய்னரை தொழிற்பூங்கா காவலாளிகள் சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னருக்குள் பலர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு சிறுவன் உள்பட 39 பேர் கன்டெய்னருக்குள் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 39 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்த, இச்சம்பவம் தொடர்பாக, வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25 வயதான லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீன நாட்டவர்கள் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இதனையடுத்து சீன தூதரக ஊழியர் ஒருவர் பிரிட்டனில் இந்த 39 உடல்கள் வைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்துள்ளார். அவர்கள் சீனர்களா என்பதை அடையாளம் காண அவர் சென்றிருப்பதாகத் தெரிகிறது.

மேலும் செய்திகள்