ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை: அமெரிக்கா
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை எனவும் பழிவாங்கும் நடவடிக்கையில் அந்த அமைப்பு ஈடுபடக்கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் விலகவில்லை எனவும் பழிவாங்குவதற்காக தாக்குதல் நடத்த அந்த அமைப்பு முயற்சிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்டர் ஜெனரல் கென்னத் மெக்கன்சி, இன்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:- “ பாக்தாதி கொல்லப்பட்டதால், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு காணாமல் போய்விடும் என்ற எந்த மாய சிந்தனையில் நாங்கள் இல்லை. அந்த அமைப்பு நீடிக்கும். அவர்கள் இன்னும் அச்சுறுத்தலாகவே நீடிப்பார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.