இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 15 கட்சிகள் ஆதரவு

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 15 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Update: 2019-11-05 10:21 GMT
கொழும்பு,

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வருகிற 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. ஒரு கோடியே 50 லட்சம்பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில், சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார்.

இவர், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதற்கும், காணாமல் போனதற்கும் காரணமாக இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 15 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அகில இலங்கை திராவிட மகாசபா, இலங்கை டெலோ கட்சி, இந்திய வம்சாவளி மக்கள் கட்சி உள்பட 15 கட்சிகள் ஆதரவு தர முன்வந்துள்ளன. இலங்கை பொதுஜன பெரமுனாவுடன் இந்த 15 கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதையடுத்து, கோத்தபய ராஜபக்சேவை ஆதரிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை 40-ஐ தாண்டி உள்ளது.

மேலும் செய்திகள்