பிலிப்பைன்ஸ் நாட்டில் குண்டு வீசி தாக்குதல்; காவலர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரி வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் காவலர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மனிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிசாமிஸ் ஒரியண்டல் மாகாணத்தில் உள்ள இனிடாவோ கல்லூரியில் இன்று காலை 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கையில் கையெறி குண்டுடன் சுற்றி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கல்லூரிக்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த நபர் தன்னிடம் இருந்த கையெறி குண்டை காவல்துறையினரை நோக்கி வீசினார். இதில் அங்கிருந்த காவலர் ஒருவர் பலியானார். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை சுட்டுக்கொன்றனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும் தாக்குதல் நடத்திய நபர் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.