ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம்: தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி

ஆப்பிரிக்க நாட்டில் தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியாகினர்.

Update: 2019-12-02 17:26 GMT
வாகடூகு,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ பாசோவில் ஐ.எஸ். மற்றும் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஹன்டோவ்கவ்ரா நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த பயங்கரவாதிகள் சிறிதும் ஈவுஇரக்கமின்றி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே தேவாலயத்தில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகள் வழியில் இருந்த பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புபடை அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்