மொபைலை பயன்படுத்த முகத்தை ஸ்கேன் செய்வதை கட்டாயமாக்கும் சீனா
சீனாவில் புதிய மொபைல் போன் சேவைகளைப் பதிவுசெய்யும் மக்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஷாங்காய்
சீன மக்களில் அதிகமானோர் தங்களின் மொபைல் வழியாகதான் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சீனாவில் புதிய மொபைல் போன் சேவைகளைப் பதிவுசெய்யும் மக்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிமுறைகளை சீனா, ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தியுள்ளது, இது மோசடியைத் தடுக்கும் நோக்கில் இருப்பதாக சீன அரசு கூறி உள்ளது.
நாட்டிலுள்ள லட்சக்கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை கடந்த 1-ந்தேதி முதல் அமலாகி உள்ளது.
இணையத்தில் உலவும் மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சீன அரசு தெரிவித்து உள்ளது.
சீனாவில் மக்களை கண்காணிக்க முகத்தை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தை அந்நாட்டு அரசு ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது.
பல்பொருள் அங்காடிகள், சுரங்கப்பாதை அமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் ஏற்கனவே முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அலிபாபா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதன் ஹேமா சூப்பர்மார்க்கெட்டில் தங்கள் முகத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது மற்றும் அதன் தலைமையகமான ஹாங்க்சோவில் ஒரு ஓட்டலை நடத்துகிறது, அங்கு விருந்தினர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுடன் தங்கள் முகத்தை முன்கூட்டியே செக்-இன் செய்ய ஸ்கேன் செய்யலாம்.
சில முக்கிய சீன நகரங்களின் மெட்ரோ அமைப்புகள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளன. சீன பயணிகளை வகைப்படுத்த இதைப் பயன்படுத்தி "வெவ்வேறு பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளை" அனுமதிக்கும் என்று அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தித்தாளான சீனா டெய்லி கூறியுள்ளது.
இத்தகைய தொழில்நுட்பங்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் நாடாக சீனா உள்ளது. ஆனால், சமீபத்தில் நாடு முழுவதும் இதனை அதிகமாக பயன்படுத்த தொடங்கியிருப்பது அந்நாட்டில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
சீனா டெலிகாம், சீனா யூனிகாம் மற்றும் சீனா மொபைல் ஆகியவை சீன அரசுக்கு சொந்தமான மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவங்கள் ஆகும். புதிய இணையதள சேவை அல்லது புதிய தரவுகளை பதிவிறக்கும்போது மக்கள் அவர்களின் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். அவர்கள் புகைப்படமும் எடுக்கப்படுகிறார்கள்.
ஆனால், மக்கள் வழங்குகின்ற அடையாள அட்டையோடு, அவர்களது அடையாளங்கள் ஒத்து போகின்றனவா என்பதை பார்க்க அவர்களின் முகம் இப்போது ஸ்கேன் செய்யப்படுகிறது.
தங்களின் சொந்தப் பெயர்களில் மக்கள் இணைய வசதியை பயன்படுத்துகிறார்களா? என்பதை அறிய சீனா இத்தகைய விதிமுறைகைள அமலாக்க பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.
இணையத்தில் மக்கள் ஏதாவது பதிவிட வேண்டுமானால் அவர்களின் உண்மையான அடையாளத்தை சரிபார்க்கும் புதிய விதியை சீனா கடந்த 2017ம் ஆண்டு அமலாக்கியது.
சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகள், செல்பேசி சேவையை பயன்படுத்துகிறவர்களை கண்டறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.