இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு
இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்சேவிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவர் பதவியை சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார். இதற்கிடையே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இலங்கையில், வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.