விலங்கியல் பூங்காவில் புலிக்கூண்டுக்குள் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
சவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலியால் தாக்கப்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ரியாத்,
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் புலிகள் வசிக்கும் கூண்டுக்குள் விழுந்து விட்டார். இதை கண்ட புலி ஒன்று அவரை கடிக்கத் தொடங்கியது.
இதனைக் கண்ட பூங்கா ஊழியர்கள் துப்பாக்கி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தி, புலி மயங்கிய பின் அவரை மீட்டனர். புலி தாக்கியதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ரியாத் நகர போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சூடானைச் சேர்ந்த முகம்மத் அப்துல் மோஷன் என்பது தெரியவந்தது. அவர் எப்படி புலிக்கூண்டுக்குள் சென்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.