பாகிஸ்தானில் பரபரப்பு: 3-வது திருமணம் செய்ய இருந்த கணவரை அடித்து, உதைத்த முதல் மனைவி

பாகிஸ்தானில் 3-வது திருமணம் செய்ய இருந்த கணவரை முதல் மனைவி அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-14 00:00 GMT
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள ஷாகி ஹாசன் சோவார்ங்கி என்ற இடத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு ஆசிப் ரபீக் என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, மண்டபத்துக்குள் நுழைந்த ஒரு பெண் மணமகன் ரபீக்கை சரமாரியாக தாக்கினார். பெண்ணுடன் வந்திருந்த உறவுக்காரர்களும் அவரை அடித்து உதைத்தனர். இதை பார்த்து, அதிர்ச்சியடைந்த மணமக்கள் வீட்டார் ரபீக்கை அவர்களிடம் இருந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அந்த கும்பல் கடும் ஆத்திரத்துடன் ரபீக்கின் ஆடைகளை கிழித்து, தர்ம அடி கொடுத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த கும்பலிடம் இருந்து மணமகனை மீட்டனர். விசாரணையில், தாக்குதல் நடத்திய பெண் தனது பெயர் மதிகா என்றும், ரபீக்தான் தனது கணவர் என்றும் கூறினார்.

மேலும், தனக்கும், ரபீக்குக்கும் 2014-ல் திருமணம் நடந்ததாகவும், அதன் பின்னர் தனக்கு தெரியாமல் ரபீக், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறினார். அதனை தொடர்ந்து, போலீசாரும் ரபீக்குக்கு தர்ம அடி கொடுத்து, அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். ஆனால் ரபீக்கோ, தான் தனது 2 மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டதாகவும், எனவே ஒரே நேரத்தில் 4 பெண்களை கூட திருமணம் செய்து கொள்ள தனக்கு உரிமை இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் செய்திகள்