கொலம்பியாவில் கார் வெடித்து சிதறி 7 பேர் பலி

கொலம்பியாவில் கார் வெடித்து சிதறி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

Update: 2020-02-19 06:59 GMT
போகோடா, 

கொலம்பியாவின் கவ்கா பிராந்தியத்துக்குட்பட்ட ரோசா நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

இதில் காரில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் கார் வெடித்து சிதறியபோது, அதன் அருகில் சென்று கொண்டிருந்த மேலும் 2 கார்கள் சிக்கி சேதம் அடைந்தன.

இதில் அந்த 2 கார்களிலும் பயணம் செய்த 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இது ராணுவ வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு என கருதப்பட்டது. ஆனால் பின்னர் இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும், விபத்து என்றும் அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது.

எனினும் விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்