தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு 7 பேர் பலி
தென்கொரியாவில் தீவிரமுடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
சியோல்,
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சீனாவில் நேற்றுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்து இருந்தது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரம் ஆக அதிகரித்திருந்தது.
சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியாவில் அதிவேகமுடன் பரவ தொடங்கியுள்ளது. நேற்று 123 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்திருந்தது.
தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், இன்று 161 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 763 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை 'ரெட் அலார்ட்' ஆக உயர்த்தியுள்ளது.