கொரோனா பீதிக்கு மத்தியில் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேற்றம்
கொரோனா பீதிக்கு மத்தியில் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறினர்.
ஒட்டாவா,
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். சுயமாக சம்பாதித்து வாழ விரும்புவதாக தெரிவித்த அவர்கள் தங்களது 10 மாத ஆண் குழந்தை ஆர்ச்சியுடன் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர்.
இந்த நிலையில் சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாரி-மேகன் தம்பதி கனடாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறி அமெரிக்காவில் குடியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹாரியின் தந்தையும் இளவரசருமான சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய சில நாட்களுக்கு பிறகு தம்பதி இருவரும் அமெரிக்காவில் குடியேறிய தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசால் அமெரிக்கா கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் அவர்கள் குடியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக எல்லைகள் முழுமையாக பூட்டப்படுவதற்கு முன்பாக ஹாரி-மேகன் தம்பதி கனடாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.