போரிஸ் ஜான்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும்; உலக தலைவர்கள் விருப்பம்

போரிஸ் ஜான்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று உலக தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-04-07 05:01 GMT
லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா  தொற்று ஏற்பட்டதையடுத்து  தன்னைத்தானே போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக்கொண்டார்.  ஆனால் நேற்று திடீரென லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மிகவும் சோர்வாகவும், பரிதாபமான நிலையிலும் தனது வீட்டுஅறையிலிருந்து வெளியேறி மருத்துவமனைக்குச்சென்றார். இந்நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்ததால் உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றினர்.

புனித தாமஸ் மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், “ பிரதமர் ஜான்சன் சுயநினைவுடன்தான் இருக்கிறார், அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், அதீதமான காய்ச்சலும் இருந்தது, இது மேலும் அவரின் உடல்நிலையை மோசமாக்கும் என்பதால், அவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்க வேண்டியது இருந்ததால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினோம்” எனத் தெரிவித்தார் இதனால் தனது பொறுப்புகள் அனைத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் கவனித்துக்கொள்வார் எனப் பிரதமர் ஜான்ஸன் தெரிவித்தார்.

இதனிடையே, போரிஸ் ஜான்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று உலகத் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், “ போரிஸ் ஜான்சன் உடல் நலம் தேற அனைத்து அமெரிக்கர்களும் பிரார்த்திப்பார்கள்” என்றார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ  ஆகியோரும்  போரிஸ் ஜான்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என விருப்பம்  தெரிவித்துள்ளனர்.  

மேலும் செய்திகள்