மலேசியாவில் ஏப்ரல் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் முகைதீன் யாசின்
மலேசியாவில் ஏப்ரல் 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்,
சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 1,617,574 - பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் 365,789 -பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், மக்கள் சமூக விலகலைப் பின்பற்றுவதன் மூலமே வைரஸ் தொற்றைத் தடுக்க முடியும் என்று உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதற்கு ஏதுவாக 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் இருவாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார். இதன்படி, ஏப்ரல் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.